ஒரு பக்கம் போராட்ட அலை: மறுபக்கம் பாராட்டு மழை

ஊராட்சி தலைவர், துணை தலைவரை கண்டித்து ஒரு பக்கம் போராட்டம், மறுபக்கம் பாராட்டு விழா நடந்தது.

Update: 2021-12-03 14:30 GMT

கொசு வலைக்குள் அமர்ந்து போராட்டம் நடத்திய ஊராட்சி உறுப்பினர்கள்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேலாயுதம்பாளையம் ஊராட்சி உறுப்பினர்கள் முத்துசாமி (2-வது வார்டு), ஜெகநாதன் (4வது வார்டு), கார்த்தி (6வது வார்டு), பிரகாஷ் (9வது வார்டு) ஆகியோர் கொசு வலைக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறுகையில்,' ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர், பெண்களாக இருப்பதால், அவர்களது கணவர்களின் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது. வார்டு உறுப்பினர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, பணிகள் பாதிக்கப்படுகிறது. ஊராட்சி பகுதிகளில் கொசு மருந்து முறையாக தெளிக்கப்படாததால் மழை காலத்தில் கொசு அதிகமாகி மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்படும் நிலை உள்ளது,' என்றனர்.

இந்த போராட்டம் துணைத்தலைவர் பதவியை எதிர்நோக்கி, சிலரால், உள் நோக்கத்தோடு நடப்படுவதாக, தலைவர் மற்றும் பொதுமக்கள் சிலர் கூறினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இதையடுத்து அவினாசி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

சில மணி நேர இடைவெளியில், ஊராட்சி பொதுமக்கள் சிலர் ஒன்றுகூடி, தலைவர், துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு, வேலாயுதம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பாராட்டு விழா நடத்தினர். அவர்களுக்கு மாலை, சால்வை அணிவித்த பின் ஊர் மக்கள் சிலர் கூறியதாவது:


வேலாயுதம்பாளையம், ஆட்டையம்பாளையம் பகுதியில் உள்ள இரண்டு மயானங்களும், 60 ஆண்டுகளுக்கு பிறகு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மயானத்தில் பூங்கா அமைக்கும் பணியும் பணி நடைபெறுகிறது. வேலாயுதம்பாளையம் விநாயகர் கோவில் அருகில் உள்ள பொது கிணறு பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத நிலையில், சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

காசிகவுண்டன்புதூர் ஆதிதிராவிடர் காலனியில், 50 ஆண்டுகளுக்கு பிறகு, 400 அடியில் பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஆதிதிராவிடர் காலனியில், மூன்று அடி அகலமுள்ள, சோலார் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஊராட்சி தலைவர் சாந்திவேலுசாமி கூறுகையில்,''கடந்த, 20 ஆண்டுகளாக செய்யாத வளர்ச்சிப்பணிகளை தற்போது செய்து வருகிறோம். சில உறுப்பினர்கள் ஒத்துழைப்பதில்லை. மேற்கொண்டு நிறைய பணிகளை செய்ய வேண்டியுள்ளது,' என்றார்.

Tags:    

Similar News