தொற்று குறைய என்ன வழி? அமைச்சர் சொல்வதை கேளுங்க...

‘‘தொற்று முற்றிலுமாக ஒழிய வழி, சமூக இடைவெளி பின்பற்றுவது தான்’’ என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.

Update: 2021-11-26 12:00 GMT

அவிநாசியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அதலைமையில் நடந்த மக்கள் குறைகேட்பு முகாமில் குவிந்த மக்கள் 

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் முதல்வரின், 'மக்கள் குறை கேட்கும் முகாம்' நடத்தப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், தலைமை வகித்தார். செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, பேசியதாவது;

கடந்த, 10 ஆண்டுகளில் சரியான திட்டமிடல் இல்லாததால், அரசின் நிதிநிலை மிக மோசமான நிலையில் உள்ளது. இருப்பினும், மக்கள் நலன் சார்ந்த பணிகளில், முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார். நிதிநிலையும், படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. அரசு பொறுப்பேற்ற போது, நம் மாநிலத்தில் தினசரி, 35 ஆயிரம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகினர். அரசு எடுத்த துரித நடவடிக்கையால், தற்போது, தொற்று பாதிப்போர் எண்ணிக்கை, தினமும், 1,000க்குள் குறைந்திருக்கிறது. இருப்பினும், முழுமையாக குறையவில்லை.

திருப்பூரில், 85 சதவீதம் பேர், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 35 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அனைவரும், சரியான கால இடைவெளியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றுவது, தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்ப்பது மட்டுமே, தொற்றை ஒழிக்க ஒரே வழி. இவ்வாறு, அவர் பேசினார்.

இந்த குறை கேட்கும் முகாமில், நுாற்றுக்கணக்கான மக்கள் சமூகஇடை வெளியின்றி திரண்டிருந்தனர். மனு கொடுக்க முண்டியடித்தனர். இது, அதிகாரிகள் மத்தியில் தர்ம சங்கட நிலையை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News