திருப்பூரில் தாய், 2 குழந்தைகள் அடித்துக் கொலை - பரபரப்பு

திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில், தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2022-05-23 12:45 GMT

திருவாரூரை சேர்ந்தவர், முத்துமாரி. இவர், இரு வாரங்களுக்கு முன்பு, திருப்பூர் நெருப்பெரிச்சல் அரசுப்பள்ளி வீதியில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினார். அவருடன் தர்ணீஷ் (வயது 9) மற்றும் நித்தீஷ் (வயது 6) ஆகிய இரு மகன்களும் வசித்து வந்துள்ளனர்.

முத்துமாரியின் வீட்டுக்கு, ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை, வழக்கம் போல் அங்கு  வந்த அந்த நபருக்கும், முத்துமாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த நபர் மட்டும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனிடையே, சிறிது நேரத்தில் அங்கு வந்த வீட்டின் உரிமையாளர், முத்துமாரியின் வீட்டினுள் தாயும், அவரது இரு குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவ இடத்தில், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஏஜி பாபு தலைமையில் போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முத்துமாரி மற்றும் குழந்தைகள் இருவரை கொண்ற மர்ம நபர் யார் என்றும், எதற்காக கொலை நடந்தது என்றும் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், இரு குழந்தைகள் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News