பிரபல நகைக்கடையில் திருடிய இளம்பெண், தாயார் கைது

வள்ளியூர் பிரபல நகைகடையில் 47பவுன் நகையை திருடிய இளம்பெண் மற்றும் அவரது தாயாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-01 09:59 GMT

நகையை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி.

நெல்லை மாவட்டம், வள்ளியூர் பழைய பேரூந்து நிலையம் அருகில் பிரபல நகைக்கடையான திருமலை ஜீவல்லரி செயல்பட்டு வருகிறது. இதனை வள்ளியூர் யாதவர் தெருவைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவர் நடத்தி வருகிறார்.

இங்கு பணகுடி, கலந்தபனை அருகே உள்ள இராஜலிங்கபுரத்தைச் சேர்ந்த லெட்சுமணன் – விஜயலெட்சுமி தம்பதியின் மகள் சுபா (22) என்ற இளம்பெண் விற்பனை பிரதிநிதியாக கடந்த ஒரு வருடங்களாக வேலை செய்து வந்தார்.

கடந்த ஒரு மாதங்களாக நகைக்கடையின் உரிமையாளர் ராமச்சந்திரனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் நகை கடைக்கு சரிவர வரமுடியவில்லை.

இந்நிலையில் உடல்நிலை சரியானதால் கடந்த 15ம் தேதி கடைக்கு சென்று நகைகளை ஆய்வு செய்தபோது, 47 பவுன் நகைகள் மாயமானது தெரிய வந்தது. உடனே கடையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது, அதில் விற்பனை பிரதிநிதியான சுபா நகைகளை திருடி தனது தாயார் விஜயலெட்சுமியிடம் கொடுத்தது தெரியவந்தது.

இது குறித்து ராமசந்திரன் வள்ளியூர் காவல் உதவி கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஏ எஸ்.பி. உத்தரவின் பேரில் வள்ளியூர் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது வழக்குபதிவு செய்து விசாரணை தீவிர விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் கடந்த 4 நாட்களாக நகைக்கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி மானிட்டர் பழுதாகி இருந்ததால் பழுது நீக்குவதற்காக மானிட்டரை சர்வீஸ் சென்டருக்கு அனுப்பியுள்ளனர். மானிட்டர் இல்லாததால் சிசிடிவியில் பதிவாகாது என்று நினைத்துக்கொண்டு அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இளம்பெண் சுபா திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து  வள்ளியூர் போலீசார் சுபாவையும், அவரது தாயார் விஜயலெட்சுமியையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News