நெல்லையில் ஆதார் கார்டுக்கு அலைக்கழிப்பு; கைக்குழந்தைகளுடன் பெண் தர்ணா

திசையன்விளையில் அஞ்சல் துறையினர் ஆதார் கார்டு எடுக்க அலக்கழிப்பதாகக் கூறி பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் தர்ணா ஈடுபட்டார்.

Update: 2021-08-04 15:37 GMT

கைக்குழந்தையுடன் போராட்டம் நடத்திய புஷ்பா.

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பா. இவர் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுப்பதற்காக தொடர்ந்து நான்கு நாட்களாக திசையன்விளை அஞ்சல் அலுவலகத்திற்கு அலைந்து உள்ளார்.

நான்கு நாட்களாக அலைந்தும் அவருக்கு அஞ்சல் அலுவலகத்தில் டோக்கன் வழங்கப்படவில்லை. மேலும் அஞ்சல் நிலையத்திற்கு வெளியே கடும் வெயிலில் குழந்தைகளுடன் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் விரக்தி அடைந்த பெண் புஷ்பா தனது இரண்டு கைக் குழந்தைகளுடன் அஞ்சல் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.

தகவலறிந்து வந்த திசையன்விளை காவல் துறை துணை ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி இசக்கியப்பன் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திசையன்விளை கிராம நிர்வாக அலுவலர் இசக்கியப்பனிடம் தொலைபேசியில் விவரம் கேட்டறிந்த தாசில்தார் செல்வகுமார் விஏஓ தொலைபேசியிலேயே அப்பெண்ணிடம் சமாதானம் பேசி இன்றைய தினமே குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுப்பதற்கு உறுதி அளித்ததை தொடர்ந்து அவர் மறியலை வாபஸ் பெற்றார்.

திசையன்விளை அஞ்சல் அலுவலக அதிகாரிகளோ ஒரு நாளைக்கு 20 முதல் 30 டோக்கன் வரையே வழங்க முடியும். மேலும் சர்வர் வேலை செய்ய முடியாமல் போனால் வழங்கப்பட்ட 30 டோக்கனுக்கு கூட ஆதார் கார்டு எடுக்க  முடியாமல் போகும் நிலை ஏற்படும்.

மேலும் அஞ்சலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் திசையன்விளை சுற்றிலும் உள்ள கிராம மக்கள் அனைவரும் திசையன்விளை அஞ்சல் அலுவலகத்தை ஆதார் கார்டு எடுப்பதற்கு நாடி வருவதால் கூட்டம் அலைமோதுகிறது. இதனை தவிர்க்க திசையன்விளை பகுதியில் அரசு சார்பில் ஆதார் கார்டு எடுப்பதற்கு தனி ஆதார் சேவை மையம் அமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். 

நடு ரோட்டிலேயே குழந்தைகளுடன் அமர்ந்து பெண் ஒருவர் போராட்டம் நடத்தியதால் திசையன்விளை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News