ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த ஆணையர், தன்னார்வலர்கள்

ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டியை மாநகராட்சி ஆணையாளர், தன்னார்வலர்கள் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2021-05-12 01:31 GMT

ஆதரவற்ற மூதாட்டியை மீட்கும் காட்சி.

கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வரும் இந்த நேரத்தில் மாநகரில் பல்வேறு இடங்களில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட முதியவர்கள் ஆதரவின்றியும், தேவையான உணவு கிடைக்காமலும் சாலையோரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

நெல்லை மாநகர் என்ஜிஓ காலனி பேருந்து நிலையம் முன்பாக ஆதரவற்ற நிலையில் ஒரு மூதாட்டி இருப்பதாக பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் நேரில் வந்து மூதாட்டியை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

அப்போது, மூதாட்டி சுத்தமல்லி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர் பேரன் வீட்டில் தங்கி இருந்ததாகவும் தற்போது ஊரடங்கு காலத்தில் உணவு கிடைக்காமல் இங்கே வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரை பாதுகாப்பாக அவரது வீட்டிற்கு கொண்டு விடுவதற்கான பணிகளை உடனே செய்ய மாநகராட்சி ஆணையாளர், தன்னார்வலர் சரவணனிடம் தெரிவித்தார்.

அதன்படி மாநகராட்சியுடன் இணைந்து ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லங்கள் நடத்தி வரும் தன்னார்வலர் சரவணன் தனது குழுவினருடன் வந்து மூதாட்டியை உடனடியாக பாதுகாப்பாக அழைத்துச் சென்று சுத்தமல்லியில் உள்ள அவரது வீட்டில் சேர்த்தார் மேலும் அவருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான பலசரக்கு மற்றும் உணவுத் தேவைக்கான பொருட்களை வழங்கினார்.

உதவி செய்ய கூட மற்றவர்கள் வர முடியாத இந்த ஊரடங்கு காலத்தில் இவர்களை மீட்பதற்கான பணிகள் இன்று முதல் தொடங்குகிறது என மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்தார்.

Tags:    

Similar News