நெல்லையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மரங்கள் அதில் வாழும் உயிரினங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

Update: 2021-06-10 08:21 GMT

நெல்லையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லுரரிகளை  பசுமையாக்கும் வகையில் இன்று முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ள மரங்கள் மற்றும் அதனை சார்ந்து வாழும் உயிரினங்கள் குறித்த  கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் பசுமையாக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களை கணக்கெடுத்து புதிதாக மரங்கள் நடும் பணி தொடங்க உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது;-

இந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இணைய வழிக் கருத்தரங்கில் சூழலியலை மீட்டெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள தாவரங்கள் விலங்குகள் குறித்து கணக்கெடுத்து அந்த விவரஙகளை அனைவருக்கும் தெரியும் வகையில் காட்சிப்படுத்தப்படும். போதிய இடம் வசதியுள்ள பள்ளிகளில் அதிக மரங்களை வளர்த்து பசுமைக் காடுகளை உருவாக்க முடிவு செய்துள்ளோம். அதன் தொடக்க நிகழ்வாக இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ள மரங்கள் விலங்குகள் மற்றும் பூச்சியினங்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. தொடர்ந்து அனைத்து பள்ளிகளலும் இந்த பணிகள் தொடங்கப்படும். தற்போதைக்கு இந்த பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் திட்டம் இல்லை. கணக்கெடுப்பின்போது ஆபத்தான விலங்குகள் இருந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து அவற்றை காடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம். ஏற்கனவே பள்ளிகளில் மரம் வளர்ப்பு திட்டம் இருந்தாலும் அதை அதிகப்படுத்தவே இந்த நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். தேவையான இடவசதி எங்கு இருக்கிறதோ அங்கு அதிகளவு மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Similar News