திடியூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்

திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக 47 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2022-03-14 15:09 GMT

திடியூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் திடியூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் திடியூர் இ -சேவை மையம் அருகில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தி இத்திட்டம் தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் திட்டத்தின் முதல் 48 மணி நேரம் இலவச சிகிச்சை வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் விவசாய நலனில் அக்கறை கொண்டு விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது முன்னால் முதலமைச்சர் கலைஞர். இத்திட்டத்தை இப்போது தான் பல மாநிலங்கள் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. விவசாய திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர்தான், இப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு இன்னும் சிறப்பான பல திட்டங்களை தந்து இந்தியாவிலே விவசாய நலனில் அக்கறை கொண்ட முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் 2021-2022ஆம் ஆண்டிற்கான நடப்பு பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையிலுள்ள நெல்லினை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்திட ஏதுவாக திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக 47 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரை 34 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்னும் நெல்கொள்முதல் நிலையங்கள் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு அருகாமையிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேர்வு செய்து நெல்லினை விற்பனை செய்து கொள்ள ஏதுவாக நேரடியாகவே அல்லது இ-சேவை மையம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலைங்களில் மூலமாகவோ ஆன்லைன்-ல் பதிவு செய்து பயனடைந்து கொள்ளலாம். கரீப் மார்க்கெட்டிங் பருவம் 2021-2022-ல் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை குவிண்டால் ஒன்றுக்கு நெல்கிரேடு ஏ ரகம் குறைந்தபட்ச ரூ.1960 மற்றும் ஊக்கத்தொகை ரூ.100 ஆக மொத்தம் ரூ.2060 ஆகவும், நெல் பொது ரகம் குறைந்தபட்ச ரூ.1940 மற்றும் ஊக்கத்தொகை ரூ.75 ஆக மொத்தம் ரூ.2015 ஆகவும், அரசு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த நெல் கொள்முதல் பருவங்களில் திருநெல்வேலி மண்டலத்தில் 2018-19 ஆம் ஆண்டில் 50000 மெ.டன் நெல்லும், 2019-20 ஆம் ஆண்டில் 58000 மெ.டன் நெல்லும், 2020-21 ஆம் ஆண்டில் 95000 மெ.டன் நெல்லும், மற்றும் 2021-22 ஆம் ஆண்டில் கார் பருவத்தில் 20000 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும், நடப்பு பிசானப் பருவத்தில் 80000 மெ.டன் நெல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்திட நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும் நெல்லுக்குரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ECS முறையில் வரவு வைக்கப்படும். என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள் எஸ்.சாலமோன் டேவிட், எம்.ஏ கனகராஜ், இணை இயக்குநர் வேளாண்மைத்துறை இரா.கஜேந்திரபாண்டியன், கல்லிடைகுறிச்சி பேரூராட்சி துணை தலைவர் இசக்கிபாண்டியன், திடியூர் ஊராட்சி மன்ற தலைவர், பா.வசந்திபாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News