நெல்லையில் சூடு பிடித்த தேர்தல் களம்: வேட்பாளரை அறிமுகம் செய்த கனிமொழி

நெல்லையில், உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்களை, கனிமொழி எம்.பி. அறிமுகம் செய்து வைத்தார்.

Update: 2021-09-26 01:45 GMT

அம்பாசமுத்திரத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசிய கனிமொழி.

நெல்லை மாவட்டத்தில்,  ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, நெல்லை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரம் ஒன்றிய திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.  நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடந்த கூட்டத்தில், திமுக மாநில மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான  பங்கேற்று,  வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.

கனிமொழி எம்.பி. பேசியதாவது: திமுக ஆட்சி,  அனைவரின் போற்றுதலுக்கும், பாராட்டுக்கும் உரிய ஆட்சியாக உள்ளது. இந்தப் பெருமையோடு நாம் தலைநிமிர்ந்து வாக்கு சேகரிக்க முடியும். இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் விவசாயிகளின் மீது மிகுந்த அக்கறை கொண்டு விவசாயத்திற்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த மாநிலம்,  இந்தியாவிலேயே தமிழகம் தான்.

திமுக அரசு பொறுப்பேற்று 4 மாத காலத்தில் 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழில் முதலீட்டை பெற்று 41,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அடுத்த கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய திட்டமும், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

அரசு பணியில் பெண்களுக்கென தனி ஒதுக்கீடு தந்தது, திமுக ஆட்சிதான். தற்போது அதனை உயர்த்தி அரசு பணியில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு என, முதல்வர் ஸ்டாலின் தந்துள்ளார். அரசு தரும் திட்டங்கள் மக்களை சென்றடைய உள்ளாட்சி முக்கியமானதாகும், எனவே உள்ளாட்சி அமைப்புகளில் திமுகவினர் வெற்றி பெற்றால்தான் முதல்வரின் எண்ணத்தை, இந்த அரசின் எண்ணத்தை நிறைவேற்ற முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.

இதில், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திமுக வேட்பாளர் அறிமுகத்தை தொடர்ந்து, நெல்லையில் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

Tags:    

Similar News