Tiruchendur Temple Sasti Vizha திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழா: மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள்

Tiruchendur Temple Sasti Vizha தூத்துக்குடி மாவட்டத்தில், காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் அருகேயுள்ள மருத்துவ முகாம்களில் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2023-11-15 07:46 GMT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி. (கோப்பு படம்).

Tiruchendur Temple Sasti Vizha

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழா தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன் தலைமையில் சுகாதாரத்துறை சார்பாக 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ குழுக்கள் மூலம் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் மருத்துவ குழுக்கள் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு கலையரங்கம் அருகில், கோயிலின் உட்புறம் வடக்கு வாசல் அருகில், நாழிக்கிணறு அருகில், கோவிலின் தெற்கு வாசல் அருகில் ஆகிய இடங்களில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

திருச்செந்தூரில் அனைத்து பகுதிகளிலும் கோயிலைச் சுற்றியும் தினசரி காலை, மாலை என இருவேளைகளிலும் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் மேல்நிலை நீர்தொட்டிகள் மூலமும் லாரிகள் மூலமும் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் குளோரின் அளவை பரிசோதனை செய்திட சுகாதார ஆய்வாளர்கள் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் சேவைகள் கலையரங்கம், நாழிக்கிணறு, மேலரதவீதி மற்றும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  கோயிலுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை அருந்திடவும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை உண்ணவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குப்பைகள் மற்றும் உணவு கழிவுகளை அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் போட்டு சுற்றுப்புற சுகாதாரத்தை பேணவும் அறிவுறுத்தப்படுகிறது. காய்ச்சல், சளி, இருமல், உடற்சோர்வு, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் அருகிலுள்ள மருத்துவ முகாம்களில் சிகிச்சை எடுத்து கொள்ளவும், உப்பு சர்க்கரை கரைசல் பருகிடவும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News