விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய தூத்துக்குடி எஸ்.பி. அதிரடி உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-02-26 04:28 GMT

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டத்தில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பைக் ரேஸ் செல்லுதல், இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களைப் பொருத்தி அதிக ஒலி எழுப்பியபடி ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் காவல் துறையிடம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டுதல், வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்கள், மதுபோதையில் வாகனம் ஒட்டுதல், இருசக்கர வாகனங்களில் சைலன்சர்களை நீக்கிவிட்டு அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை உபயோகித்து வாகனம் ஓட்டுதல், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை ஒலிக்கவிட்டு வாகனம் ஓட்டுதல், தடை செய்யப்பட்ட ஹேண்டில்பார் மாற்றி ஓட்டுதல், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைகவசம் அணியாமல் செல்வது, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாமல் செல்வது, இருசக்கர வாகனங்களில் 3 பேராக செல்வது ஆகிய போக்குவரத்து வீதிமிறல்களில் ஈடுபடுவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபாரதம் விதிக்கப்படும்.

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டப்படி, மோட்டார் வாகனங்களில் சாலைகளில் பந்தயங்களில் ஈடுபட்டால் (Racing) முதல் முறை மீறுபவர்களுக்கு ரூபாய் 5000 அபராதமும், இரண்டாவது முறை மீறுபவர்களுக்கு ரூபாய் 10,000 அபராதமும் விதிக்கப்படும். இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களைப் பொருத்தி அதிக ஒலி எழுப்பிச் செல்பவர்கள் (Alteration of Loud silencers) மற்றும் வாகனங்களில் ஹேண்டில்பார் போன்றவற்றை மாற்றி (Retrofitting of motor vehicle parts) வாகனங்களை பயன்படுத்துவர்களுக்கு ரூபாய் 5,000 அபராதமும் விதிக்கப்படும்.

செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் (Use of handheld communication devices while driving) முதல் முறை ரூபாய் 1,000 அபராதமும், இரண்டாவது முறை ரூபாய் 10,000 அபராதமும் விதிக்கப்படும். மதுபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு (Drunk and Driving) ரூபாய் 10,000 அபராதமும், காப்பீடு இல்லாமல் வாகனங்கள் ஓட்டினால் (without insurance) முதல் முறை ரூபாய் 2,000-மும், இரண்டாவது முறை ரூபாய் 4,000 அபராதமும் விதிக்கப்படும்.

இருசக்கர வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட 2 நபர்களுக்கு மேல் பயணம் செய்தால் (Triples) ரூபாய் 1,000 அபராதமும், இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் ஓட்டினாலும் (without helmet), நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினாலும் (without seat belt) ரூபாய் 1,000 அபராதமும் விதிக்கப்படும்.

பதிவு செய்யப்படாத வாகனங்களை பயன்படுத்தினால் (Without registration) முதல் முறை ரூபாய் 2,500-மும் இரண்டாவது முறை பயன்படுத்தினால் ரூபாய் 5,000அபராதமும், அபாயகரமாகவும், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் (Driving dangerously - Rash and Negligent Driving ) வாகனம் ஓட்டினால் முதல் முறை ரூபாய் 1,000-மும், இரண்டாவது முறை ரூபாய் 10,000 அபராதமும் விதிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் (without driving license) வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூபாய் 5,000 அபராதமும் விதிக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News