ஆளுநர் பதவி இல்லை என்றால் பல சிக்கல்கள் தீர்ந்துவிடும்.. கனிமொழி எம்.பி. பேட்டி..

ஆளுநர் பதவி இல்லை என்றால் பல சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

Update: 2022-11-28 13:12 GMT

தூத்துக்குடியில் வானவில் மன்றத்தை தொடங்கி வைத்து கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வானவில் மன்றம் என்ற திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்தத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் துவக்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில், பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வானவில் மன்றம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. தமிழக சமூக நலன்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மன்றத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்ந்து, கனிமொழி எம்.பி. பேசியதாவது:

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வானவில் மன்றம் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் சில பாடங்கள் மாணவர்களுக்கு புரியாது. மாணவர்களின் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இந்தத் திட்டத்தில் பாடங்கள் செயல்முறையாக செய்து காண்பிக்கப்படுகிறது. அப்போது பாடங்கள் மாணவர்கள் மனதில் எளிதில் பதியும்.

மாணவர்கள் யூடியூப்பில் அறிவியல் சம்பந்தமான வீடியோக்களை பார்த்து நிறைய சந்தேகங்களை பள்ளியில் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் எதைப்படித்தாலும் ஆர்வத்துடன் புரிந்து படிக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் எமல்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவடைந்ததும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். ஆளுநர் பதவி காலாவதியான பதவி போல் உள்ளது.

ஆளுநர் பதவி இல்லை என்றால் ஆன்லைன் ரம்மியை ஒழித்து இருப்போம். ஆளுநர் பதவி இல்லை என்றால் பல சிக்கல் தீர்ந்து விடும். எதற்காக ஆன்லைன் ரம்மி தடையை பாதுகாக்க துடிக்கிறாராகள் என்று தெரியவில்லை என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

Tags:    

Similar News