தூத்துக்குடி வழக்கறிஞர் கொலையில் கைதான மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் கைதானவர்களில் மேலும் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2023-03-29 13:10 GMT

தூத்துக்குடி சோரீஸ்புரம் அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் (47) கடந்த 22.02.2023 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோரீஸ்புரம் பகுதியில் வைத்து முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், இந்த கொலை வழக்கில் தென்காசி மாவட்டம் கீழ கடையம் பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் (29), தூத்துக்குடி ஆறுமுகநேரி கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (29), திருவள்ளூர் மாவட்டம் கம்மவார் பாளையம் பகுதியை சேர்ந்த இலங்கேஸ்வரன் (29), தூத்துக்குடி புதுக்கோட்டை, கூட்டாம்புளி பகுதியை சேர்ந்த நமோ நாராயணன் (33), ஆறுமுகநேரி ராஜமணியபுரம் பகுதியை சேர்ந்த முத்துராஜ் (23), ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்த பாஸ்கர் (29) உட்பட இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் ராஜரத்தினம், வேல்முருகன் மற்றும் இலங்கேஸ்வரன் ஆகியோர் கடந்த 25.03.2023 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள நமோ நாராயணன், முத்துராஜ் மற்றும் பாஸ்கர் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து, கொலை வழக்கில் கைதான புதுக்கோட்டை, கூட்டாம்புளி பகுதியை சேர்ந்த நமோ நாராயணன், ஆறுமுகநேரி ராஜமணியபுரம் பகுதியை சேர்ந்த முத்துராஜ், ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்த பாஸ்கர் ஆகிய மூன்று பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், நமோ நாராயணன், முத்துராஜ், பாஸ்கர் ஆகிய மூவரையும் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News