தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்ற கைதி.. சிறைத்துறை மீது பரபரப்பு புகார்...

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-03-29 05:33 GMT

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற கைதி ஆதி பரமசிவன்.

மதுரையை சேர்ந்தவர் ஆதி பரமசிவன். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆதி பரமசிவன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அப்போது ஆதிபரமசிவன் அங்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மதுரையில் இருந்து அவரை தூத்துக்குடியில் உள்ள பேரூரணி சிறைச்சாலைக்கு காவல்துறையினர் மாற்றம் செய்திருந்தனர். இந்தநிலையில் ஆதி பரமசிவனுக்கு நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று காலை பேருரணி சிறையில் இருந்து காவலர்கள் பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.

அப்போது ஆதி பரமசிவன் தனது கையில் மறைத்து வைத்திருந்த தகரத்தால் இடது கையில் பல்வேறு இடங்களில் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனே பாதுகாப்புக்காக அவருடன் வந்த போலீஸார் அதை தடுத்து உள்ளனர். ஏற்கெனவே, கால் முறிவு ஏற்பட்ட நிலையில், வாக்கர் உதவியுடன் மருத்துவனைக்கு வந்த ஆதி பரமசிவன் அங்கிருந்த செய்தியாளர்களை பார்த்து முழக்கங்களை எழுப்பினார்.


மேலும், செய்தியாளர்களை பார்த்து அவர் கூறுகையில், காவல்துறையினர் தன்னை தனிமை சிறையில் அடைத்து தொந்தரவு கொடுப்பதாகவும், உணவு உள்ளிட்டவை சரியாக வழங்கவில்லை என்றும் புகார் தெரிவித்தார். சிறையில் கொடுக்கப்படும் உணவில் புழுக்கள் இருப்பதாகவும், தன்னை சிறையிலேயே கொல்ல முயற்சி நடக்கிறது என்றும் ஆதி பரமசிவன் குற்றம் சாட்டினார்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது ஆதி பரமசிவன் அடிக்கடி தற்கொலை முயற்சி செய்து கொண்டு போலீஸாரை மிரட்டி வருவது வழக்கமாக ஒன்றுதான் என தெரிவித்தனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பேரூரனி சிறையில் இருந்து சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட கைதி ஒருவர் தன்னை சிறையில் கொடுமைப்படுத்துவதாக கூறி தகரத்தால் கையை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News