தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்..!

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கல்லூரி முதல்வர் சுஜாத்குமார் தேசியக் கொடியை ஏற்றினார்.;

Update: 2023-08-15 05:53 GMT

போட்டியில் வெற்றி பெற்ற மாணவி ஒருவருக்கு பரிசு வழங்கும் முதல்வர்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 77 ஆவது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரியின்; ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவின்போது, பாதுகாப்பு கமாண்டோ, மாணவ பிரதிநிதி, உதவி உடற்கல்வி இயக்குநர் மற்றும் விளையாட்டு செயலர் ஆகியோர் கல்லூரியின் முதல்வர் சுஜாத்குமாரை விழா மேடைக்கு அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, கல்லூரியின் முதல்வர் சுஜாத்குமார் தேசிய கொடியை ஏற்றினார். கல்லூரியின் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் அனைவரும் தேசிய கொடிக்கு மரியாதையுடன் வணக்கம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் தனது சுதந்திர தின உரையில், சுதந்திர தின அனுசரிப்பின் முக்கிய அம்சங்களான சுதந்திர போராட்டம், யோசனைகள், தீர்வுகள், செயல்பாடுகள், சாதனைகள் போன்றவற்றில் இந்தியாவின் முன்னேற்றம் நினைவுகூர்ந்ததோடு மட்டுமல்லாமல் அதனோடு விவசாயம் மற்றும் மீன்வளத்தில் வளர்ச்சி குறித்தும் எடுத்துரைத்தார்.


மேலும், மீன்வளப் பல்கலைக்கழத்தின் சாதனைகள் குறித்து அவர் விரிவாக விளக்கினார். சுதந்திரத்திற்கு பாடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த தியாகிகளை போற்றி அவர் நினைவு கூர்ந்தார். விழாவில் முதலாமாண்டு இளங்கலை மீன்வள அறிவியியல் மாணவி நிக்கத் மற்றும் ரிஸோனா ஆகியோர் முறையே ஆங்கிலம் மற்றும் தமிழில் சுதந்திர தின உரை நிகழ்த்தினர்.

மேலும், ஆளுநர் உத்தரவின்படி, மாணவர் சங்கம் மற்றும் நாட்டுநலப்பணித் திட்டம் இணைந்து “மகாகவி பாரதியார் மற்றும் தேசிய விடுதலை பயணம்” என்ற மையக்கருத்தின் அடிப்படையில் மாணவ-மாணவிகளிடையே “சுதந்திரப் போராட்டத்தில் பாரதியாரின் பங்களிப்பு” என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், “மகாகவி பாரதியாரைப் பற்றிய கவிதைகள்” என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதன் பகுதியாக இளங்கலை முதலாமாண்டு மாணவி லெட்சுமி கல்யாணி “மகாகவி பாரதியின் சுதந்தர தாகம்” குறித்து உரை நிகழ்த்தினார். மேலும். நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக மரக்கன்று கல்லூரியின் வளாகத்தில் நடப்பட்டன. நிறைவாக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி இணைப் பேராசிரியர் செந்தில்குமார், உதவி உடற்கல்வி இயக்குநர் நடராஜன் மற்றும் விளையாட்டு செயலாளர் பார்த்திபன் ஆகியோர்கள் ஒருங்கிணைத்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News