தூத்துக்குடியில் காரில் புகையிலைப் பொருட்கள் கடத்தல்: ஒருவர் கைது

தூத்துக்குடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-08 05:06 GMT

தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 95 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை போன்றவற்றை கண்காணிக்க தனைப்படைகளை அமைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், போதைப் பொருட்கள் கடத்தல், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவோர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மேற்பார்வையில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி தலைமையில் உதவி ஆய்வாளர் ஞானராஜன் மற்றும் போலீசார் நேற்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, கூட்டாம்புளி பாலம் அருகில் வைத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின்போது, அந்த காரில் தூத்துக்குடி குலையன்கரிசல் பகுதியை சேர்ந்த மாரிராமர் (35) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையெடுத்து, மாரிராமரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைதான மாரிராமரிடம் இருந்த ரூபாய் 1,25,000 மதிப்புள்ள 95 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News