தூத்துக்குடியில் உள்ள மின்னணு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு

தூத்துக்குடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியை தொடர்ந்து மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

Update: 2023-07-29 06:49 GMT

மாதிரி வாக்குப்பதிவை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில், நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை இயந்திரங்கள் ஆகியவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அந்த இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியானது கடந்த 4 ஆம் தேதி தொடங்கப்பட்டு ஜூலை 28 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, முதல் மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மாதிரி வாக்குப்பதிவு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான செந்தில்ராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார். அப்போது, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) காமாட்சி கணேசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


இந்த மாதிரி வாக்குப்பதிவானது தேர்ந்தெடுக்கப்படும் 5 சதவீத இயந்திரங்களில், 1 சதவீத இயந்திரங்களில் 1200 வாக்குகளும், 2 சதவீத இயந்திரங்களில் 1000 வாக்குகளும், 2 சதவீத இயந்திரங்களில் 500 வாக்குகளும் நடைபெற்றது. அந்தப் பணிகள் முடிவடைந்த பின்பு, முதல் நிலை சரிப்பார்ப்பு பணியில் சரி வர செயல்படும் இயந்திரங்கள் அடங்கிய வாக்கு பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள பாதுகாப்பு அறையானது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியரால் சீலிடப்பட்டது.

முதல் நிலை சரிபார்ப்பு பணி முடிவடைந்த 7 நாட்களுக்குள் முதல்நிலை சரிபார்ப்பு இயந்திரங்களில் பழுதடைந்த இயந்திரங்கள் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு காவல் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளது.

Tags:    

Similar News