திருச்செந்தூரில் போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருச்செந்தூரில் போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Update: 2023-03-10 12:22 GMT

தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 10.12.2015 அன்று பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் திருநெல்வேலி மாவட்டம், ஊத்துமலை பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார் (32) என்பவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கை அப்போதைய திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாககுமாரி புலன் விசாரணை செய்து கடந்த 30.03.2016 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் குற்றம்சாட்டப்பட்ட பழனிகுமாருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து, பழனிக்குமார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாககுமாரி, குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் லெட்சுமி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News