ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Update: 2021-06-11 12:10 GMT

 இந்து ஆட்டோ முன்னணி 

தூத்துக்குடியில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு கொரோனா ஊரடங்கு கால நிவாரண உதவியாக ரூ. 5ஆயிரம் வழங்க கோரி இந்து ஆட்டோ முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணத்தால் வருவாய் இழந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க கோரி, இந்து முன்னணியின் தொழிற்சங்க பிரிவான இந்து ஆட்டோ முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்து முன்னணி நெல்லை கோட்ட செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துக்குமார் முன்னிலை வகித்தார். ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் பெற்றுக்கொண்டார்.

மனுவில் பொது முடக்கம் அமலில் உள்ளவரை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இழப்பீடாக மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். வாகனங்களின் இன்சூரன்ஸ், வரி, எப்சி கட்டணம், ஆகியவற்றை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். வாகனங்களின் பெயரில் பெறப்பட்டுள்ள மாதாந்திர இஎம்ஐ கட்டணத்தை ஊரடங்கு முடியும்வரை விலக்களிக்க வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவு செய்யாதவர்கள் என அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் இந்த நிவாரண உதவி வழங்க வேண்டும். கரோனா ஊரடங்கால் பரிதவிக்கும் ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்பத்தை பாதுகாக்க தமிழக அரசு உரிய ஆவண செய்ய வேண்டும் என்றனர்.

இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் நாராயண ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பு வினோத் குமார், ஹெச்.ஒய்.எஃப் ஆழ்வார், வடக்கு மண்டல பொறுப்பாளர் ராஜேஷ் மற்றும் இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட தலைவர் பாண்டியன், திருச்செந்தூர் ஆட்டோ முன்னணி தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் மாயாண்டி, பொருளாளர் முனீஸ்வர ராமசெல்வம், திருச்செந்தூர் காந்தி தினசரி ஆட்டோ சங்க தலைவர் சைமன் பீட்டர், செயலாளர் அரச பாண்டி, பொருளாளர் கணேஷ், தூத்துக்குடி ஆட்டோ முன்னணி தலைவர் மாரியப்பன், செயலாளர் சேகர், பொருளாளர் மூர்த்தி, மற்றும் உறுப்பினர்கள் சுப்புராயலு, சரவணன், மாரிமுத்து உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Similar News