மின்இணைப்புக்கு ஆதார் பதிவு கட்டாயம் தமிழக அரசு மீது மக்கள் அதிருப்தி.. மார்க். கம்யூ. குற்றச்சாட்டு..

தமிழகத்தில் மின்இணைப்போடு ஆதார் பதிவு கட்டாயம் என்பதால் அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2022-12-05 06:04 GMT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

தூத்துக்குடி மாவட்ட மக்களின் பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  சார்பில் 150 கிலோமீட்டர் தூர நடை பயணம் நடைபெற்றது. இதன் முடிவில், தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு கொண்டுவந்துள்ள மின்கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் மட்டுமல்லாமல் சிறு மற்றும் குறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழக அரசு மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேலும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்லி தமிழக அரசு பொதுமக்களை வற்புறுத்துகிறது.

அரசின் இந்த நடவடிக்கையால் தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, அந்த நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்.

மேலும், மத்திய ஆளும் பாஜக அரசு பாஜக ஆளாத மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அவ்வாறு செய்ய முடியாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர் மூலம் போட்டி அரசை மத்திய அரசு நடத்தி வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். அவ்வாறு காலம் தாழ்தியதன் காரணமாக ஆன்லைன் ரம்மி தடை மசோதா காலாவதி ஆகி உள்ளது. இதன் காரணமாக சில நாட்களிலேயே ஆன்லைன் ரம்மி தற்கொலைகள் அதிகரித்து உள்ளன.

எனவே, ஆன்லைன் ரம்மி மசோதா தடைச் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும். மேலும், மாநில அரசின் உரிமைகளை பறிக்கக் கூடிய விதமாக ஆளுநர் செயல்படுகிறார். அதை ஆளுநர் கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags:    

Similar News