பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவன்-மனைவிக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை
பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தம்பதிக்கு, 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.;
தூத்துக்குடி நீதிமன்றம். (கோப்பு படம்).
தூத்துக்குடி மாவட்டம், புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாலெட்சுமி காலனி பகுதியில், கடந்த 2015 ம் ஆண்டு தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், அதே பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரது மனைவி வீரம்மாள் (46) என்பவரை சிலர் அவதூறாக பேசி துடைப்பத்தால், தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த வீரம்மாள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப் பதிந்த புதூர் போலீசார் வீரம்மாள் தற்கொலை வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்தவர்களான கிருஷ்ணன் (58) மற்றும் அவரது மனைவி மல்லிகா (53) ஆகிய இருவரையும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கை அப்போதைய புதூர் காவல் நிலைய ஆய்வாளர்கள் சண்முகம் மற்றும் பிச்சையா ஆகியோர் புலன் விசாரணை செய்து கடந்த 25.12.2015 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமனுஜம் குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மல்லிகா ஆகிய இருவருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 355-இன் கீழ் தலா 2 ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனையும், அபராதம் ரூபாய் 1000-மும் விதித்தார்.
மேலும், இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 306-ன் கீழ் தலா 10 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 10,000-அபராதம் விதித்தார். இதுதவிர கிருஷ்ணனுக்கு தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடைச்சட்டம் பிரிவு 4-இன்படி (Section 4 of TNPHW act) கூடுதலாக 3 ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனையும் ரூபாய் 10,000- அபராதம் விதித்தும், ஆக மொத்தம் கிருஷ்ணனுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதம் ரூபாய் 21,000- மும், கிருஷ்ணனின் மனைவி மல்லிகாவிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதம் ரூபாய் 11,000/-மும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதூர் காவல் நிலைய ஆய்வாளர்கள் சண்முகம் மற்றும் பிச்சையா ஆகியோர்களையும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாளையு, விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர்கள் சூர்யகுமார், மற்றும் நவீன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.