தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் தலைமை ஆசிரியருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் கைதான தலைமை ஆசிரியருக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-04-26 13:49 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9 சிறுமிகளிடம் கடந்த 2022 ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், அந்தப் பள்ளியின் தலைமையாசிரியரான விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சின்ன கொல்லம்பட்டி பகுதியை சேர்ந்த தாமஸ் சாமுவேல் (57) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை அப்போதைய கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி ஆகியோர் புலன் விசாரணை செய்து கடந்த 23.06.2022 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் குற்றம்சாட்டப்பட்ட தாமஸ் சாமுவேலுக்கு 14 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 20,000/- அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி ஆகியோருக்கும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை பெண் காவலர் மகேஸ்வரி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News