நல்ல திட்டங்களை தமிழகம் எதிர்க்கிறது.. தூத்துக்குடியில் ஆளுநர் தமிழிசை பேட்டி...

புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட நல்லத் திட்டங்களை தமிழகம் போன்ற சில மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன என புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-03-29 05:56 GMT

தூத்துக்குடி விமான நிலையத்தில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சைந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

திருநெல்வேலி தனியார் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தூத்துக்குடி வ உ சிதம்பரனார் துறைமுகம் வளர்ச்சிக்காக 200 கோடி ரூபாய் மதிப்பில் ஆறு வழிச்சாலை அமைக்க பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் இந்த திட்டம் தூத்துக்குடிக்கு பொருளாதாரத்தில் மிக பிரம்மாண்டமான ஒரு முன்னேற்றத்தை கொண்டு வரும். இதை போல இன்னும் பல முன்னேற்றங்கள் வர இருக்கிறது.

புதுச்சேரியும் பல முன்னேற்றத்தை பெறுகிறது. இப்போது காரைக்கால் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட இருக்கிறது. புதுச்சேரியில் இருந்து கோயம்புத்தூர் சென்னைக்கு சிறியரக விமான போக்குவரத்து வர இருக்கிறது. 20 பேர் அமர்ந்து செல்லும் வகையில் விமானம் சென்று வர இருக்கிறது.

எல்லாவிதத்திலும் வளர்ச்சி திட்டங்களை பாரத பிரதமர் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். எல்லா இடங்களிலும் நல்லது நடக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. இந்தியாவில் புதுச்சேரி மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. புதுச்சேரி அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு கொடுக்கப்பட்டு விட்டது. கொடுத்தும் கொண்டு இருக்கிறோம்.

தமிழகத்தில் தற்போதுதான் அறிவித்து இருக்கிறார்கள். செப்டம்பர் மாதம் தான் கொடுக்கிறதாக கூறி உள்ளனர். புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட போன்ற நல்ல திட்டங்களில் நல்ல அம்சங்கள் உள்ளன. ஆனால் தமிழகம் போன்ற சில மாநிலங்கள் இதை எதிர்த்து வருகின்றன. பாரத பிரதமர் மோடி இந்தியாவின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

Tags:    

Similar News