தூத்துக்குடியில் மீன்துறை ஊழியர் சங்க மாநில மாநாடு.. கனிமொழி எம்.பி.பங்கேற்பு

தூத்துக்குடியில் நடைபெற்ற மீன்துறை ஊழியர் சங்க மாநில மாநாட்டில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

Update: 2023-04-15 14:46 GMT

தூத்துக்குடியில் நடைபெற்ற மீன்துறை ஊழியர் சங்க மாநில மாநாட்டில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி.க்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தமிழக மீன்வளத்துறையில் பணிபுரியும் ஊழியர் சங்கத்தின் முதலாவது மாநில மாநாடு தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சங்கத்தின் பொதுச் செயலாளர் மகாராஜன், பொருளாளர் நந்தகுமார், மாநில இணைச்செயலாளர் சுபேரா பானு, பொதுக்குழு உறுப்பினர் சண்முகப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப்பொதுச் செயலாளருமான கனிமொழி, தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மாநாட்டில் பேசிய மீன்துறை சங்க நிர்வாகிகள் பலர் தங்களது கோரிக்கைகள் குறித்தும், அதை அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதற்கு பதில் அளித்து பேசிய, மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீன்வளத்துறை ஊழியர்களின் கோரிக்கைகள் தமிழக முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதில் உடனடியாக நிறைவேற்றப் படக்கூடிய கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும், மீதமுள்ள கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மீனவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றும் வகையில் மீன்வளத்துறை ஊழியர்கள் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News