தூத்துக்குடியில் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாமில் 2873 குடும்பத்தினர் பதிவு

தூத்துக்குடியில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாமில் 2873 குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

Update: 2023-12-05 15:09 GMT

தூத்துக்குடியில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்ட சிறப்பு முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் ஏற்பாட்டில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம், மில்லாபுரம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இந்த முகாமில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட பணியாளர்கள், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு முகாமிலேயே வருமான சான்று உடனே வழங்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைக்கான இணையதளம் வழியாக புகைப்படம் எடுக்கப்பட்டது.

இந்த இரண்டு நாட்கள் முகாமில் 573 நபர்களுக்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டது. ஏற்கனவே கலைஞர் காப்பீட்டுத் திட்ட அட்டை வைத்திருக்கும் 630 பேர்களுக்கு இந்த முகாமில் சரி பார்க்கப்பட்டு இணைய தளம் வழியாக அவர்களுக்குரிய எண்களை குறித்து கொடுத்து "இ" சேவை மையத்தில் அவரவர் எண்ணை குறிப்பிட்டு காப்பீட்டு அட்டை பெற்றிட தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த முகாமில் பொதுமக்கள் அதிக பேர் கலந்து கொண்டுள்ளதால் அவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலரிடம் முகாமின்போதே வருமானச் சான்று கொடுத்து 06.12.2023 முதல் 07.02.2024 வரை தினசரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரவர்களுக்கு குறிப்பிட்ட தேதிகளில் சென்று புகைப்படம் எடுத்திட 1670 நபர்களுக்கு உரிய அலுவலர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு முகாம் மூலம் 2873 குடும்பங்கள் பயன்பெற்றுள்ளனர் என்றும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து பொது மக்களுக்கும் அனைத்து வகை வசதிகள், தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது என்றும் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

Tags:    

Similar News