தூத்துக்குடியில் குழந்தைகள் தின பேரணி: அமைச்சர் பங்கேற்பு

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெற்ற பேரணியை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

Update: 2023-11-14 14:54 GMT

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெற்ற பேரணியை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி ராஜாஜி பூங்காவில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை செல்லும் WALK FOR CHILDREN பேரணியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் அலெக்ஸ், குழந்தை நலக்குழு தலைவர் ரூபன் கிசோர், இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் உமா, சிறப்பு சிறார் காவல் அலகு உறுப்பினர் வழக்கறிஞர் சொர்ணலதா, காமராஜ் கல்லூரி மாணவ, மாணவிகள், சைல்டு லைன் பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. சமூக பாதுகாப்புத்துறை மூலம் குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளின் உரிமைகளை காத்திட விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்கவும், குழந்தைகளின் உரிமையை காக்கவும், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை இணைந்து போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்கவும், இழப்பீடு தொகை விரைந்து வழங்கவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் நல்ல அவித்த முட்டைகள்தான் வழங்கப்படுகிறது.

குழந்தை திருமணங்கள் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பெற்றோர்களே குழந்தை திருமணம் நடத்தும் நிலை இருக்கிறது. அதேபோல், 18 வயதுக்கு கீழ் காதல் திருமணம் செய்துகொள்ளும் நிலையும் இருக்கிறது. அவர்கள்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து குழந்தை திருமணங்களை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

Tags:    

Similar News