குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் (ம) உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-ஆட்சியர் செந்தில்ராஜ்

Update: 2021-07-28 00:42 GMT

ஆட்சியர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் (ம) உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் 2015ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவர் (ம) உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குழந்தைகள் நலக்குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியில் அல்லது மன நல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும் போது 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர், ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.

இதற்கான விண்ணப்ப படிவத்தை தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் தூத்துக்குடி மாவட்ட இணையதளத்திலும் (www.thoothukudi.nic.in) விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்கள் வரை) 10.08.2021 அன்று மாலை 5.45 மணிக்குள் நேரடியாகவோ அல்லது பதிவு தபால் வாயிலாகவோ கீழ்கண்ட முகவரிக்கு கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,176, முத்துசுரபி பில்டிங், மணிநகர், பாளை ரோடு, தூத்துக்குடி - 628 003. தொலைபேசி எண்: 0461-2331188 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News