Bjp State President Interview ஒரு நபர் தவறால் அமலாக்கத்துறை மீது தவறு கூற முடியாது: அண்ணாமலை பேட்டி

Bjp State President Interview ஒரு நபர் தவறு செய்துள்ளதால் அமலாக்கதுறையே தவறு செய்துள்ளதாக கூறுவது ஏற்க முடியாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Update: 2023-12-02 06:58 GMT

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Bjp State President Interview

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அமலாக்கத்துறையில் இது போன்ற நடவடிக்கையில் பலர் கைதாகி இருக்கிறார்கள். ஏற்கெனவே ராஜஸ்தானில் ஒருவர் கைதாகி இருக்கிறார். ஒரு மனிதன் தவறு செய்ததற்காக அமலாக்கத்துறை மோசம் என கூற முடியாது. தமிழக காவல்துறையில் ஒருவர் தவறு செய்தால் தமிழக காவல்துறையும் மோசம் என யாரும் சொல்லிவிட முடியாது. அமலாக்கதுறையில் யார் தவறு செய்திருக்கிறார் என பார்த்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக காவல்துறை இதை நேர்மையாக அணுக வேண்டும்.

இதுபோன்று லஞ்சம் வாங்கியவர்களை தேர்ந்தெடுத்து பிடிப்பதற்கு லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு முழு அதிகாரம் இருக்கிறது. இதை அரசியலாக பார்ப்பதை விட ஒரு நபர் லஞ்சம் வாங்க முற்பட்டு வாங்கி இருக்கிறார் என்றால் நேர்மையாக அணுக வேண்டும் என்பது எனது கருத்து.

மழை வெள்ளம் தொடர்பாக தமிழகத்தை இதுவரை ஆண்ட கட்சிகளுக்கு நிரந்தர தீர்வு காண எந்த வியூகமும் கிடையாது. அதை மாற்ற வேண்டும். சென்னை திமுகவின் கோட்டை என்பார்கள். சென்னை மக்களுக்கு திமுக பெரும் துயரத்தை மட்டுமே ஒவ்வொரு மழைக்காலத்திலும் கொடுத்திருக்கிறது.

தென் தமிழகம் கொலைக்கார பகுதியாக மாறிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக கொலைகள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. முன்னேற்றம் இல்லாதது மற்றும் காவல்துறை சரியாக செயல்படாதது, ஆளும் கட்சியின் அக்கறை இல்லாமல் போன்றவை தான் இதற்கு காரணம்.

மாலத்தீவில் கைதான தூத்துக்குடி மீனவர்களின் விசைப்படகை மீட்பது தொடர்பாக முடிந்தவரை அபராதத் தொகையை கட்டாமல் வெளியே கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். அபராதம் போட்டால் மத்திய அரசு சார்பில் கட்டிக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

உதயநிதி ஸ்டாலினைப் பொறுத்தவரை அரசியலுக்கே வரமாட்டேன் என்று சொல்லி அரசியலுக்கு வந்தார். பின்னர் எம்எல்ஏ. ஆனார். தற்போது துணை முதல் அமைச்சராக வரப்போகிறார் என அவரது கட்சியினர் சொல்லி  வருகின்றனர். அவர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என அண்ணாமலை தெரிவித்தார்.

Tags:    

Similar News