மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திய இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கடத்தி சென்ற மெக்கானிக்கிற்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் தீர்ப்பு.

Update: 2023-04-27 11:52 GMT

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முறம்பன் கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் கோயம்புத்தூர் இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த மெக்கானிக்காக வேலை பார்க்கும் மாதவன் என்ற இளைஞர் பழகி உள்ளார்.

அந்த இன்ஸ்டாகிராம் பழக்கத்தை பயன்படுத்தி கடந்த 12-11-2020 அன்று மாதவன் பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்வது கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று தங்கி உள்ளார். மூன்று நாட்களுக்கு பிறகு மணியாச்சி காவல்துறையினர் மாதவனை கைது செய்து பத்தாம் வகுப்பு மாணவியை மீட்டனர்.

இது தொடர்பாக கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உல்லாசமாக இருந்த மாதவன் மீது வழக்குபதிவு செய்து வழக்கு விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட மகிளா மற்றும் கூடுதல் போக்சோ அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரணை செய்த கூடுதல் போக்சோ அமர்வு நீதிமன்ற நீதிபதி மாதவ ராமானுஜம் பத்தாம் வகுப்பு மாணவியை விருப்பம் இல்லாமல் கடத்தியதற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஆக மொத்தம் 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் ரூபாய் இரண்டாயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ரேவதி ஆஜரானார்.

Tags:    

Similar News