பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா: தூத்துக்குடியில் தடை உத்தரவு

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு 12ம் தேதி மாலை முதல் 15ம் தேதி காலை வரை தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-11 10:01 GMT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் மே 13 மற்றும் 14-ம் தேதி வீரசக்கதேவி ஆலய திருவிழா நடக்கிறது. இதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறவும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும், நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் 15-ந் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடக்கூடாது.

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் வந்து விழாவில் கலந்து கொள்ள வருபவர்கள், வாள், கத்தி, கம்பு, போன்ற ஆயுதங்களை ஊர்வலமாக கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது

அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வரப்படுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது

இந்த நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவிருப்பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை அணுகி முன் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் இத்தடையுத்தரவு, திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது என  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News