வீரபாண்டி சித்திரைத் திருவிழா ரத்து - செயல் அலுவலர் அறிவிப்பு.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக தேனி மாவட்டம் வீரபாண்டி சித்திரைத் திருவிழா, இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.

Update: 2021-04-14 03:48 GMT

வீரபாண்டி கௌமாரிஅம்மன் ஆலய முகப்பு தோற்றம்


தேனி மாவட்டம் வீரபாண்டியில் புகழ்பெற்ற ஸ்ரீ கௌமாரி அம்மன் திருக்கோவில் உள்ளது. . முல்லைப் பெரியாற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள இத்திருக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் ஒரு வாரம் இரவு- பகலாக திருவிழா நடைபெறும். தென்மாவட்டங்களின் சிறப்பு மிக்க இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.  

அந்த வகையில் இந்தாண்டு வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, வருகிற ஏப்ரல் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 21நாட்கள் விரதமிருந்து மே 11முதல் 18வரை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.  தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக மதம் சார்ந்த திருவிழாக்களை தமிழக அரசு ரத்து செய்துள்ளதால் தீச்சட்டி, ஆயிரங்கண் பானை, பால் குடம், காவடி உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் 10வயதுக்கு கீழ், 65வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேங்காய், வாழைப்பழம், பால், உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் எடுத்து வருவதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாக கோவில் செயல் அலுவலர் சுரேஷ் அறிவித்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றால் கடந்தாண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் வீரபாண்டி சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News