விளையாட்டு மைதானம் மேம்பாட்டு பணிகளை ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்

போடிநாயக்கனூர் நகராட்சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-19 16:27 GMT

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.

போடி நகராட்சிக்கு சொந்தமான சிட்னி விளையாட்டு மைதானம் சுப்புராஜ் நகரில் உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நவீன உடற்பயிற்சி கூடம், நடை பயிற்சி மேடை அமைக்கும் பணிகள் நகர் ஊரமைப்பு திட்ட நிதியிலிருந்து ரூ.1 கோடி 25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் முடிவடையும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் திடீரென ஆய்வு செய்தார். அப்போது பணிகளின் தரம், பணிகள் முடிவடையும் நிலை குறித்து கேட்டறிந்தார். விரைவில் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து 15 நாட்களில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வின் போது, நகராட்சி ஆணையாளர் த.சகிலா, நகராட்சி பொறியாளர் வி.குணசேகர், சுப்புராஜ் நகர் குடியிருப்போர் சங்க தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News