தேனியில் முடிவுக்கு வந்தது புகார் பெட்டி: மனுக்களை நேரடியாக வாங்கிய கலெக்டர்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் 18 மாதங்களுக்குப் பின்னர் மக்களிடம் நேரடியாக பெறப்பட்டது

Update: 2021-09-20 08:00 GMT

இன்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மக்களை கலெக்டர் முரளீதரன் நேரடியாக சந்தி்த்து மனுக்களை பெற்றார்.

தேனியில் 18 மாதங்களுக்கும் மேலாக அமலில் இருந்த புகார் பெட்டி நடைமுறைக்கு கலெக்டர் முரளீதரன் இன்று முற்றுப்புள்ளி வைத்தார்.  மக்களை தேடி வந்து  அவரே மனுக்களை பெற்றார்.

தேனி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள் கிழமை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கும். கொரோனா காலத்தில் 18 மாதங்களாக இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடக்கவில்லை. மாறாக கலெக்டர் அலுவலக வாசலில் புகார் பெட்டி வைத்தனர். மக்கள் தங்கள் புகார்களையும், கோரிக்கை  குறித்த மனுக்களையும் எழுதி இந்த பெட்டிக்குள் போட்டு விட்டுச்செல்ல வேண்டும். அதிகாரிகள் அந்த மனுக்களை சேகரித்து, துறைவாரியாக அனுப்பி நடவடிக்கை எடுப்பார்கள்.

ஆனால், இந்த புகார்பெட்டி நடைமுறையினை மக்கள் அவ்வளவாக விரும்பவில்லை என்றே கூறலாம். அதிகாரிகளை பார்த்து நேரடியாக மனு கொடுத்து தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு பெறுவதையே விரும்பினர். இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலையில் வழக்கம் போல் மக்கள் கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்க வந்து வரிசையில் நின்றிருந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி இல்லை. புகார்பெட்டியும் இல்லையா? எப்படி மனு கொடுப்பது என மக்கள் யோசித்துக்கொண்டிருந்த வேளையில் கலெக்டரும், அதிகாரிகளும் நேரடியாக மக்களை தேடி வந்தனர்.

ஒவ்வொருவரையும் வரிசையில் சந்தித்து மனுக்களை வாங்கி, குறைகளை கேட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இன்னும் கொரோனா தொற்று அபாயம் நீங்கவில்லை. எனவே உங்களை அரங்கிற்குள் அழைத்து அமர வைத்து மனு வாங்க முடியவில்லை. கொரோனா அபாயம் முழுமையாக நீங்கியதும் பழைய நடைமுறை தொடரும். அதுவரை நாங்கள் உங்களை தேடி வந்து மனுக்களை வாங்கிக் கொள்கிறோம் என கலெக்டர் முரளீதரன் மக்களிடம் தெரிவித்தார்.

Tags:    

Similar News