வருங்கால விஜய்களே.. அஜீத்களே.. மாஸ்க் போடுங்க.. -கலெக்டர் முரளிதரன்

வருங்கால விஜய்களே...அஜீத்களே... நீங்க நல்லா வாழணும் அதுக்காக மாஸ்க் போடுங்க.. மருத்துவமனையில் உணவு சாப்பிட்ட கலெக்டர்.

Update: 2021-08-26 11:07 GMT

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உணவு சாப்பிட்ட கலெக்டர் முரளிதரன் 

தேனி கலெக்டர் முரளிதரன் பெரியகுளத்தில் நடைபெற்று வந்த கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள அரசு பள்ளிகளையும், அரசு மருத்துவமனையையும் ஆய்வு செய்தார். மருத்துவமனை சமையல் கூடத்திற்கு சென்ற அவர், திடீரென அங்கிருந்த பணியாளர்களிடம் நீங்கள் சமைத்த உணவை ஒரு தட்டில் வைத்து எனக்கு தாருங்கள்... என கேட்டார்.

பதறிப்போன பணியாளர்கள் (உணவின் தரம் அப்படி) உணவை தட்டில் வைத்து சாம்பார் ஊற்றி கலெக்டரிடம் கொடுத்தனர். சாப்பிட்ட கலெக்டர் சமையல் இன்னும் தரமாக இருக்க வேண்டும் என பணியாளர்களை அறிவுறுத்தினார். (சமையல் மிகவும் தரக்குறைவாக இருந்ததை கலெக்டர் வெளிக்காட்டிக் கொள்ளாமல், பணியாளர்களை பாதுகாத்தார்).

பின்னர் கண் மருத்துவப்பிரிவு, மனநோய் மருத்துவபிரிவு, வெளிநோயாளிகள் பிரிவுகளில் ஆய்வு செய்தார். அங்கு இளைஞர்கள் சிலர் விதவிதமான ஹேர் ஸ்டைலுடன் மாஸ்க் அணியாமல் நின்றிருந்தனர். அவர்களிடம் சென்ற கலெக்டர் 'வருங்கால விஜய்களே, அஜீத்களே, நீங்கள் நல்லா வாழணும், அதுக்காவாவது மாஸ்க் போடுங்க' என அறிவுறுத்தினார்.

கலெக்டரின் மென்மையான அறிவுரையில் மிகவும் சங்கோஜத்திற்கு உள்ளான அந்த இளைஞர்கள் இனி மாஸ்க் இல்லாமல் வெளியே வரமாட்டோம் சார் என கலெக்டரிடம் உறுதி அளித்தனர். அந்த இளைஞர்களுக்கு உடனடியாக கலெக்டர் தான் வைத்திருந்த மாஸ்க்குகளை கொடுத்து அணிய செய்தார்.

Tags:    

Similar News