முல்லை பெரியாறு அணை : அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

முல்லை பெரியாறு அணையை நீர் வளத்துறை அமைச்சர் துரை முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-11-05 10:27 GMT

முல்லை பெரியாறு அணையை பார்வையிட்ட அமைச்சர் துரை முருகன்

முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்படும் என்று கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கடந்த 29ம் தேதி தெரிவித்தார். அதன்படி மொத்தமுள்ள 13 மதகுகளில், 8 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசின் அனுமதியில்லாமல் கேரள அமைச்சர்களும் அதிகாரிகளும் திறந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கேரள அரசின் இந்தச் செயலுக்கு பல்வேறு விவசாயச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த சூழ்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, சக்ரபாணி உள்ளிட்டோர் உடன் சென்றனர். முல்லைப் பெரியாறு அணை தமிழக கட்டுப்பாட்டில் இருப்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

தமிழக அரசுதான் முல்லைப்பெரியாறு அணையை கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்திருந்தார். இருந்தாலும் முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்டது குறித்து எழுந்த சர்ச்சை அடங்கவில்லை. அதிமுக போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த நிலையில் திமுக அமைச்சர் துரைமுருகன் வந்து பார்வையிட்டு சென்றது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News