ராமருக்கு அணில் போல ஓபிஎஸ்க்கு நான் - ஏ.சி.சண்முகம் பேட்டி

ராமருக்கு அணில் உதவுவது போல் இந்த தேர்தலில் ஓபிஎஸ்க்கு நான் உதவியாக இருப்பேன் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தேனியில் பேட்டியளித்தார்.

Update: 2021-03-28 19:15 GMT

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தேனிக்கு வருகை தந்தார்.

முன்னதாக தேனியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் குறித்து திமுக எம்.பி ஆ.ராசா பேசியதை கண்டிப்பதாகவும், பாரம்பரியமான ஒரு கட்சியில் இருக்கும் ராசா அவதூறாக பேசியது வருத்தமளிக்கிறது. எனவே அவரது பேச்சை திரும்பப்பெற வேண்டும் மேலும் இதற்காக அவர் மன்னிப்பும் கேட்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் 190 இடங்களில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகவும், ஓபிஎஸ் துணை முதல்வராகவும் ஆவது உறுதி. இந்த ராமருக்கு அணில் உதவுவது போல் இந்த தேர்தலில் ஓபிஎஸ்க்கு நான் உதவியாக இருப்பேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு ஏழு சமுதாயங்களை ஒன்றினைந்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த வேளாளர் சமுதாய மக்கள் மனதை புன்படுத்தியுள்ளது.

இதனால் அதிமுகவிற்கு வரும் வாக்கு சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணையை மாற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளேன், தேர்தலுக்கு பிறகு பரிசீலனை செய்வதாக இருவரும் தெரிவித்துள்ளதாகக் கூறினார். இந்த சந்திப்பின் போது திரைப்பட இயக்குநர் ஆர்.பி.உதயகுமார் உடன் இருந்தார்,

Tags:    

Similar News