கிராமங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்திய ஊராட்சி தலைவர்களுக்கு பாராட்டு விழா

சங்கரன்கோவில் கிராமங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்திய ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2021-12-14 13:15 GMT

சங்கரன்கோவில் கிராமங்களில் சிசிடிவி கேமரா பொருத்திய ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள ஊராட்சிகளில் சிசிடிவி கேமரா பொருத்த காவல்துறை சார்பில் கூறப்பட்டது. அதாவது கிராமங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டும்,குற்றவாளிகளை எளிதாக கண்டறியும் வகையிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த அந்தந்த ஊராட்சித் தலைவர்களுக்கு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் பலர் தங்களது சொந்த செலவில் கிராமங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினர். சில ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூடத்தில் தீர்மானம் போட்டு அதன் மூலமும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளனர்.

இந்நிலையில் காவல்துறை சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் டி.எஸ்.பி., ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் சிசிடிவி கேமராக்களை கிராமங்களில் பொருத்திய கரிவலம்வந்த நல்லூர்,சென்னிகுளம், பெரும்பத்தூர்.குவளைக் கண்ணி,கலிங்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களுக்கு பாராட்டு தெரிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

சிசிடிவி கேமராவை பொருத்துவதன் அவசியம் குறித்தும்,மேலும் குற்றங்கள் நடைபெறாத வண்ணம் தடுக்க கிராம பகுதிகளில் தெரு விளக்குகள் பொருத்தவும் காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News