போலீசாரை தாக்கிய ரவுடி கேரளாவில் கைது

Update: 2021-06-28 05:16 GMT

 சங்கரன்கோவில் அருகே உள்ள கள்ளத்திகுளம் கிராமத்தை சேர்ந்த அசோகன்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கல்லத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அசோகன். இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் கல்லத்திகுளத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு குடி போதையில் அக்கம்பக்கத்தினருடன் தகராறு செய்ய, இதில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தென்காசி மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சின்னகோவிலான்குளம் காவலர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்திய போது அங்கு குடிபோதையில் இருந்த அசோகன் காவலர் மீது கல்லால் எறிந்தும், சாக்கடையை அள்ளி வீசியும், தலைகவசத்தால் தாக்கியும் தாக்குதல் நடத்தினாராம்.

சம்பவத்தன்று மதுபோதையில் இருந்தால் காவல்துறையினர் அசோகனை கைது செய்யாமல் விட்டு சென்றுள்ளனர்.இந்த சம்பவம் அனைத்தையும் அப்பகுதியில் உள்ள ஒருவர் செல்போன் மூலமாக வீடியோ எடுத்து வெளியிட இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சம்பவம் நடந்த பிறகு போதை தெளிந்து சுய நினைவுக்கு வந்த அசோகன் காவல்துறைக்கு பயந்து தலைமறைவானார். அசோகனை பிடிக்க எஸ்ஐ இராமகணேஷ், காவலர் பெரியதுரை தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் அசோகன் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கேரளா விரைந்த காவல்துறையினர், கேரளாவில் நண்பரின் வீட்டில் தங்கியிருந்த அசோகனை கைது செய்து சங்கரன்கோவில் அழைத்து வந்தனர். பின்பு மருத்துவ பரிசோதனைக்காக அசோகனை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Similar News