விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்: விரட்டியடித்த கிராம மக்கள்
தென்காசி, வடகரையில் விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள். கிராம மக்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.;
தென்காசி மாவட்டம் வடகரையில் விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள். கிராம மக்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
கேரள மாநில வனப் பகுதியில் இருந்து தமிழக எல்லை வனப் பகுதிக்குள் ஏராளமான காட்டுயானைகள் புகுந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியான மேக்கரை மற்றும் வடகரை உள்ளிட்ட வனப் பகுதிகளில் உள்ள தனியார் தோட்டங்களில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக புகுந்து மரங்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் இன்று வடகரை - மேக்கரை சாலையில் மூன்று ஆண் யானைகள் மலையிலிருந்து இறங்கி ஊருக்குள் புகும் வண்ணம் சாலை வழியாக உலா வந்துள்ளது. மேலும் சாலையோரத்தில் இருந்த வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. காலை பொழுது என்பதால் ஏராளமானவர்கள் விவசாயத் தோட்டத்திற்கு சென்றபோது யானைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பொதுமக்கள் அனைவரும் திரண்டு வந்து காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். யானைகள் வனப் பகுதிக்குள் புகுந்தது. வடகரை பகுதியில் யானைகள் இடமாற்றம் ஏற்பட்டுள்ளதால் வனத்துறையினர் முகாமிட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று வடகரை மற்றும் மேக்கரை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.