ஊருக்குள் புகுந்த கரடியை காட்டுக்குள் அனுப்ப வனத்துறையினர் தீவிரம்

ஊருக்குள் புகுந்த கரடியை காட்டுக்குள் அனுப்ப வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

Update: 2023-09-07 05:04 GMT

கரடியின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்கும் வனத்துறையினர்.

செங்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த கரடி-விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சம்பவம் என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் அவ்வப்போது யானை கூட்டங்கள் இறங்கி விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்த நிலையில், தற்போது செங்கோட்டை அருகே உள்ள ராஜபுரம்காலனி என்கின்ற பகுதியில் கரடி ஒன்று புகுந்துள்ளது.

இதனைப் பார்த்த பொதுமக்கள்அதிர்ச்சி அடைந்து, உடனே சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தற்போது ராஜபுரம்காலனி பகுதியில் முகாமிட்டு கரடியை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கரடியை பொதுமக்கள் மட்டுமே பார்த்துள்ள நிலையில், வனத்துறையினர் அதனை தேடி அலைந்து வருகின்றனர்.

அதேபோல், கரடியின் காலடித்தடங்களை வைத்து கரடி தற்போது எங்கே சென்றுள்ளது என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து கரடியை தீவிரமாக தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கிராமப் பகுதியில் புகுந்த கரடியானது எங்கே சென்றது? என்று தெரியாத நிலையில், கரடியானது காட்டுக்குள் சென்று விட்டதா? அல்லது ஊருக்குள் பதுங்கி உள்ளதா? என்று தெரியாமல் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News