வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்-கண்டுகொள்ளுமா தமிழக அரசு

தென்காசி மாவட்டத்தில் ஒரு கோடி மதிப்பிலான மண்பாண்ட பொருட்கள் தேக்கம்.

Update: 2021-06-02 03:59 GMT

தேங்கி கிடக்கும் மண்பானைகள்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளாக கொரோனா தாக்கம், லாக்டவுண், மற்றும் உற்பத்தி பொருட்கள் கிடைக்காமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் உற்பத்தி செய்த ஒரு கோடி மதிப்பிலான மண்பாண்ட பொருட்கள் சேமிப்பு கிட்டங்கிகளில் தேக்கம்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை, சுந்தரபாண்டியபுரம், இலஞ்சி,  தேன் பொத்தை, ஆழ்வார்குறிச்சி, தென்காசி ஆகிய பகுதிகளில் சுமார் 3000 குடும்பங்கள் மண்பாண்ட தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் வண்டல் மண் மற்றும் களிமண் ஆகியவற்றை இணைத்து பக்குவப்படுத்தி தங்கள் கைவண்ணம் மற்றும் மக்களுக்கு பிடித்த வகையில் மண்பானை, மண்சட்டி, குவளை, பூந்தொட்டி, அடுப்பு ஆகிய பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.



இந்த உற்பத்தி பொருட்கள் பெரும்பாலும் அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தங்கள் வாழ்கையை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆறு மாதம் மட்டுமே மண்பாண்டம் செய்யும்வேலை அதிகம் இருக்கும்.

மற்ற காலங்களில் கூலி வேலைக்கு செல்வது வழக்கம். இந்தச் சூழ்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக குளங்களில் களிமண் மற்றும் மணல் மண் எடுப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது. இதனை தீர்வு செய்ய பல முறை அதிகாரியிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் பலனுமில்லை. தற்போது கையிருப்பில் இருந்த மூலப்பொருட்களைக் கொண்டு மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மேலும் உற்பத்தி செய்ய போதிய மூலப்பொருட்கள் இல்லாததால் பணிகள் நடைபெறவில்லை. தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டால் குளங்களுக்கு தண்ணீர் வந்துவிடும். தண்ணீர் வருவதற்கு முன்பு மண் எடுப்பதற்கு அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என்பது மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கையாக உள்ளது.

இது ஒருபுறமிருக்க கொரோனா இவர்களது வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்டது. கடந்த ஆண்டு அறித்த ஊரடங்கால்  இழந்ததை இந்த ஆண்டு மீட்டு விடலாம் என நினைத்தனர்.ஆனால் விதியோ விடாமல் விரட்டியது. தற்போமு கொரோனா இரண்டாவத அலையின் வேகத்தில் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமலும், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர்.

இதனால் பல கோடி மதிப்பிலான மண்பாண்ட பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடியாத சூழ்நிலை நீடித்து வருகிறது. அப்போதைய அரசு கொரோனா நிவாரண நிதியாக 2000 ரூபாயும், மழைக்கால நிவாரண நிதியாக 5000 ரூபாயும் வழங்கியது. ஆனால் அந்தத் தொகை பல மண்பாண்ட தொழிலாளர்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நிலையில் அரசின் சில தளர்வு உத்தரவுக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தி பொருட்களை விற்பனை செய்தும், ஏற்றுமதி செய்தும் தங்களது பொருளாதாரத்தை மண்பாண்ட தொழிலாளர்கள் மீட்டு வந்தனர்.


தற்போது அறிவித்துள்ள ஊரடங்கால் மீண்டும் பொருளாதாரச் சரிவை மண்பாண்ட தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர். இலஞ்சி பகுதியில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பில் ஏற்றுமதிக்கு தயாராக உள்ள மண்பாண்ட பொருட்களும், ரூ.75 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சூளையில் வைத்து பக்குவப்படுத்துவதற்கான நிலையில் உள்ளது. தற்போது மர அறுவை ஆலைகள் இயங்கவில்லை. இதனால் சூளைகளுக்குத் தேவையான விறகுகள் கிடைப்பதில்லை.

உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமலும், சூளையில் வைத்து பக்குவப்படுத்த முடியாமலும் மண்பாண்ட தொழிலாளர்கள் திணறி வருகின்றனர். இலஞ்சிப் பகுதியில் மட்டுமே ஒரு கோடி மதிப்பிலான மண்பாண்ட பொருட்கள் தேக்க நிலையில் உள்ளது. உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மண்பாண்ட தொழிலுக்கு தேவையான மூல பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும். என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது உள்ள அரசு அவர்களது கோரிக்கையை ஏற்று அவர்களது வாழ்வு மேம்பட நடவடிக்கை எடுக்குமா? அல்லது மற்ற அரசைப் போல கண்டுகொள்ளாமல் சென்று விடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பானையை வீசிப்பார்ப்போம் கிடைத்தால் வாழ்வு, போனால் பானை...தட்ஸ் ஆல்

Tags:    

Similar News