சென்னையில் சிறப்பு பேருந்துகள்.. உங்கள் ஊருக்கு எங்கிருந்து செல்ல வேண்டும்?

சென்னையில் சிறப்பு பேருந்துகள்.. உங்கள் ஊருக்கு எந்த பகுதியில், எங்கிருந்து செல்ல வேண்டும் என்ற விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2022-10-19 05:10 GMT

பைல் படம்.

சென்னையில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை மாநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், சென்னையில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொதுமக்களின் வசதிக்காகவும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும். சென்னையில் இருந்து தமிழகத்தில் உள்ள பகுதிகளுக்கு 21.10.2022 முதல் 23.10.2022 வரை மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக சிறப்புப் பேருந்துகள் கீழ்கண்ட ஆறு பகுதிகளிலிருந்து இயக்கப்பட உள்ளது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். (கோயம்பேடு) புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது..

மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து  காஞ்சிபுரம், ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பூந்தமல்லி மாநகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தாம்பரம் சானிட்டோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்: திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அதை தாண்டி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் அருகில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்: திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தாம்பரம் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்: போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கே.கே நகர் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்: கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கக் கீழ்கண்ட இடங்களில் பேருந்துகளை நிறுத்தி பின் சென்னை நகருக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்துகள் (கோயம்பேடு): வண்டலூர் மேம்பாலம், இரும்புலியூர், மதுரவாயல், டோல்பிளாசா, கார்த்திகேயன் நகர், எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி, நெற்குன்றம், பூந்தமல்லி பைபாஸ் சாலை, அருகில் மேலும் அதிகப்படியாக கோயம்பேடு நோக்கி வரும் பேருந்துகள் மதுரவாயல் மேம்பாலம், வானகரம் இயேசு அழைக்கிறார் வளாகம், கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு மலர் வணிக வளாகம், கோயம்பேடு காவல் நிலையத்தின் அருகில் உள்ள இடம் ஆகிய இடங்களில் நிறுத்தி வைத்து அங்கிருந்து கோயம்பேடு பேருந்து பணிமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News