காஞ்சிபுரத்தில் போலி பட்டுச் சேலை விற்பனை அதிகரிப்பு

பட்டுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரத்தில், பட்டு சேலை வாங்க வரும் வெளியூர் மக்களை, ஏமாற்றி போலியான பட்டு சேலைகளை விற்பது அதிகரித்து வருகிறது.

Update: 2023-05-31 02:22 GMT

பட்டுப்புடவைகள் (கோப்பு படம்)

பட்டுச்சேலைகள் வாங்க, தமிழகத்தின் பிற பகுதிகள், கர்நாடகா, ஆந்திராவில் இருந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் காஞ்சிபுரம் வருகின்றனர்.அவ்வாறு வரும் வெளியூர் வாடிக்கையாளர்களை, தனியார் கடைகளுக்கு அழைத்துச் செல்ல, கோயில்களின் வாசல்களிலும், காந்தி சாலை, பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களிலும், புரோக்கர்கள் ஏராளமானோர் உள்ளனர். புரோக்கர்கள் அழைத்துச் செல்லும் கடைகளில், காஞ்சிபுரம் பட்டு சேலை எனக் கூறி, வெளியூர் சேலைகள் மோசடியாக விற்கப்படுவது, பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.

புரோக்கர்களால் வெளியூர் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதால், காஞ்சிபுரம் பட்டு சேலைகளின் மீதான மதிப்பு, வெளியூர்வாசிகளிடையே குறைவதாக, கைத்தறி கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர். கைத்தறி கூட்டுறவு சங்க கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை திசை திருப்பி, புரோக்கர்கள் பலர் வலுக்கட்டாயமாக அழைத்து செல்கின்றனர்.

அவற்றை தட்டிக் கேட்கும் சங்க ஊழியர்களை, புரோக்கர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டுகின்றனர். சில சமயங்களில் தாக்குகின்றனர். காஞ்சிபுரத்தில் புரோக்கர்களை ஒடுக்க, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Similar News