ஏற்காட்டில் குவியும் சுற்றுலா பயணிகள்; மகிழ்ச்சியில் வியாபாரிகள்

ஏற்காடு மலையின் சிலு சிலு காற்றை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் சாலையோரா வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-12-30 13:05 GMT

ஏற்காட்டின்  ரம்யமான சூழல்

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் சேலம் மாவட்டம் ஏற்காடும் ஒன்று. மனதிற்கு இதமான குளிர்ச்சி, பனிப்பொழிவு மற்றும் சிலு சிலு காற்று நிலவுவதால் ஏற்காட்டிற்கு தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை விகிதம் அதிகரித்து வருகிறது.

ஏற்காடு, தமிழக மக்களால், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. ஏற்காடு தமிழகத்தின் நடுப்பகுதியில் இருப்பதால், தமிழ்நாட்டு மக்களே அதிகம் காண வருவர். எனவே, சுற்றுலா செலவு குறைவாக இருக்கும். ஊட்டியில் கண்டு இரசிக்க வல்ல இடங்களைப் போல, ஏற்காட்டிலும் சுற்றுலா இடங்கள் உள்ளன.

ஏராளமான பசுமைகள் நிறைந்த ஏற்காடுக்கும் சுற்றுலாவிற்குமான தொடர்பு ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே உண்டு எனலாம். கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஏற்காடு தென்னிந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும்.

இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திரம் பாண்டிச்சேரி மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து ஏற்காட்டை சுற்றிப் பார்த்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதை தொடர்ந்து கடந்த ஒருவாரமாக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தவண்ணம் உள்ளனர்.

அதை தொடர்ந்து இன்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர். ஏற்காடு வந்தவர்கள் இங்குள்ள அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஸ் கார்டன், தாவரவியல் பூங்கா, லேடி சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோவில் போன்ற இடங்களை சுற்றிப் பார்த்தனர்.

ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்களில் தவிர்க்க முடியாத இடங்களில் ஏற்காடு படகு இல்லம் ஒன்று. ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தில் விரும்பி படகு சவாரி செய்து மகிழ்வார்கள்.

அதே போல் இன்று படகு இல்லத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய குவிந்தனர். இதனால் படகு சவாரி செய்ய வந்த சுற்றுலா பயணியர் நீண்ட வரிசையில் நின்று வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்யும் நிலை ஏற்பட்டது.

சுறறுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் ஏற்காடு அண்ணா பூங்கா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களைகட்ட தொடங்கியுள்ளதால் சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

Tags:    

Similar News