கர்நாடகாவில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பருவமழை பெய்துவருவதால் கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

Update: 2023-08-07 04:53 GMT

மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதே போல் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் காவிரியில் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 3-வது வாரத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு 5 நாட்கள் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

பின்னர் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் தமிழகத்துக்கு தண்ணீர்திறப்பும் குறைக்கப்பட்டது. இதனால் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 57.46 அடியாக குறைந்ததால் அணையில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை முழுவதுமாக தெரிகிறது. மேலும் கிறிஸ்துவ கோபுரமும் முழுமையாக தெரிய தொடங்கியது.

இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பருவமழை பெய்துவருவதால் கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தற்போது வினாடிக்கு 10 ஆயிரத்து 306 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 77 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 22.83 டி.எம்.சி. நீர் இருப்பு மட்டுமே உள்ளது.

Tags:    

Similar News