பிளாஸ்டிக் இல்லா வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படும்;
மஞ்சப்பை விருது, பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்**
நாமக்கல் கலெக்டர் உமா அவர்கள் "தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத இடமாக மாற்றும் பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு 'மஞ்சப்பை விருது' வழங்கப்படுகிறது. அதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையின்படி, 'மீண்டும் மஞ்சப்பை' பிரசாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் 2022-23ல் மஞ்சப்பை விருதுகளை சட்டசபையில் அறிவித்தார். இதன்படி, ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த மூன்று பள்ளிகள், மூன்று கல்லூரிகள், மூன்று வணிக நிறுவனங்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும். விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலக இணையதளத்திலும், தமிழக மாசுகட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க வரும் மே 1ம் தேதி கடைசி நாளாகும்.