சேலத்தில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா: 15,000 மாணவ, மாணவியர் பங்கேற்பு

சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகளில் 15,365 மாணவ, மாணவியர்கள் பங்கேற்கின்றனர்.

Update: 2022-12-08 05:07 GMT

சேலம் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகளை புனித பால் மேல்நிலைப்பள்ளியில் சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகளை புனித பால் மேல்நிலைப்பள்ளியில் சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகளில் 15,365 மாணவ, மாணவியர்கள் பங்கேற்கின்றனர்.

மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் மட்டுமல்லாமல் விளையாட்டு, கலை உள்ளிட்ட பிற திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழாக்களை நடத்திட ஆணையிட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கலைத் திருவிழா போட்டிகள் அனைத்து வகை அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடனம், நாடகம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம், கதை எழுதுதல், சிற்பம் செய்தல், பேச்சுப் போட்டி, இசைக் கருவி வாசித்தல், திருக்குறள் ஒப்பித்தல், புகைப்படம் எடுத்தல், பல குரல் பேச்சு, விவாத மேடை, பட்டிமன்றம் உள்ளிட்ட பல போட்டிகள் பள்ளி அளவில் 23.11.2022 முதல் 28.11.2022 வரையிலும், வட்டார அளவில் 29.11.2022 முதல் 05.12.2022 வரையிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

தற்போது வட்டார அளவில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் இன்றையதினம் 07.12.2022 முதல் 10.12.2022 வரை நான்கு நாள்கள் புனிதபால் மேல்நிலைப்பள்ளி, பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சக்தி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மணக்காடு நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிறுமலர் துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. மாவட்ட அளவில் நடைபெறும் இக்கலைத் திருவிழாவில் 207 வகையான போட்டிகளில் 15,365 மாணவ, மாணவியர்கள் பங்கேற்கின்றனர்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட உள்ளது. மேலும் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், சேலம் மாநகராட்சி 29வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிரிஜா குமரேசன் மற்றும் பள்ளி மாணவ,மாணவியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News