மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக காப்பீட்டு அட்டைகளை வழங்கிய ஆட்சியர்

சேலத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக காப்பீட்டு அட்டையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Update: 2022-10-10 15:06 GMT

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளிகள்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (10.10.2022) மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 283 மனுக்கள் வரப்பெற்றன.

மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமின்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்படும் மனுக்களின் மீது, உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 19 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் மனுக்களின் மீது தனி கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வேண்டி மனு அளித்தனர். இத்திட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளர் அவர்களிடம் அம்மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு, உடனடியாக அவரின் மனுமீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அம்மாற்றுத்திறனாளிக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27-ஆம் நாள் உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சேலம் மாவட்டத்தில் சுற்றுலாத் துறையின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் வினாடி வினாப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் அ. மயில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இரா.முருகன், மாவட்ட சுற்றுலா அலுவலர் தி.உமாதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா. மகிழ்நன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News