திறந்தவெளி இறைச்சிக் கடைகளுக்கு தடை: சேலம் ஆட்சியர் உத்தரவு

பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு, திறந்தவெளியில் இறைச்சிக் கடைகள் மற்றும் அறுமனைகள் இயங்க அனுமதி இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-12 02:51 GMT

மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் குழுக் கூட்டம்.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (11.10.2023) உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில், இறைச்சிக் கடைகள் மற்றும் அறுமனைகள் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் ஆரோக்கியமான முறையில் இறைச்சிகள் வாங்கிப் பயன்படுத்துவதை உறுதி செய்திடும் வகையில் உணவு பாதுகாப்புத் துறை, மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், மாவட்டத்தில் 1,000 இறைச்சிக் கடைகள் மட்டும் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, கடைகளில் விற்கப்படும் இறைச்சிகள் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, பொதுமக்கள் பார்வையில்படும்படி கடைகளின் முன்புறம் இறைச்சிகளை காட்சிப்படுத்தக் கூடாது. பொது இடங்களில் இறைச்சிக்காக ஆடுகளை வெட்டுதல், இறைச்சிக் கடைகளில் துரு பிடித்தக் கொக்கிகள் மற்றும் கத்திகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து, துருப்பிடிக்காத ஸ்டீல் மற்றும் எஃகு- ஆல் செய்யப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தும் வகையிலும், திறந்தவெளியில் விற்கப்படும் இறைச்சிகளில் வாகனப் புகை மற்றும் தூசிகள் படிந்து சுகாதாரக்கேடு ஏற்படாத வகையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுருத்தப்பட்டுள்ளது.

மேலும், அறுமனைகளில் வெட்டப்பட்ட இறைச்சியை மூன்று மணி நேரத்திற்குள் விற்பனை செய்தல் மற்றும் இறைச்சி விற்பனையாளர்களுக்கு உரிய மருத்துவத் தகுதிச் சான்று பெறப்பட்டுள்ளதை உறுதி செய்ய அறிவுருத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் பகுதியில் திறந்தவெளியில் இறைச்சிக் கடைகள் மற்றும் அறுமனைகள் இயங்க அனுமதி வழங்கக் கூடாது எனவும், இதற்கென உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறுவதற்கு முன்பு உள்ளுர் நிர்வாகத்தினரிடமிருந்து தடையில்லாச் சான்று பெற்றிருக்க வேண்டுமெனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.

சுகாதாரமான முன்மாதிரி இறைச்சிக் கடைகளை சேலம் மாவட்டத்தில் உருவாக்கிட வேண்டுமெனவும், சேலம் மாவட்டத்தில் இறைச்சிக் கடைகள் மற்றும் அறுமனைகளை ஒழுங்குபடுத்தும் பணிகளை இரண்டு மாத காலத்திற்குள் தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News