பத்திரப்பதிவு அலுவலகத்தின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

Salem News Today: வீரபாண்டி பத்திரப்பதிவு அலுவலகத்தின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

Update: 2023-04-21 05:23 GMT

வெளியே வீசப்பட்ட பணப்பெட்டி.

Salem News Today: சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே வீரபாண்டியில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு வேலை நேரம் முடிந்து ஊழியர்கள் வழக்கம்போல் பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை ஊழியர்கள் வந்து பார்த்தபோது அலுவலகத்தின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனைகண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அலுவலகத்தில் இருந்த நோட்டு புத்தகங்கள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. அலுவலகத்தின் பீரோவும் திறந்து கிடந்தது.

இதுகுறித்து தகவலின்பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார், சார்பதிவாளர் மணி மற்றும் சேலம் துணை காவல் கண்காணிப்பாளர் (ஊரகம்) தையல்நாயகி, காவல் ஆய்வாளர் அம்சவல்லி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணப் பெட்டி அலுவலக வளாகத்தில் தூக்கி வீசப்பட்டும், பணப்பெட்டியை உடைக்க முடியாததால் திருடன் வெளியில் வீசிச் சென்றது தெரியவந்தது. அந்தப் பெட்டியில் பணம் ஏதும் வைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே சார் பதிவாளர் அலுவலகத்தின் முக்கியமான ஆவணங்கள் திருடிச் சென்றுள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்ப நாய் மேகா, சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வீரபாண்டி நோக்கி ஓடி மீண்டும் அலுவலகம் நோக்கி ஓடி வந்தது.

சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழவைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டன. அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் விடியற்காலை 3 மணி அளவில் முகமூடி அணிந்த நபர் ஒருவர், சார்பதிவாளர் அலுவலகத்தில் பூட்டை உடைக்கும் காட்சி பதிவாகி உள்ளது. அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News